அரிசி கடையில் குழந்தையுடன் வந்து பணம் திருடிய பெண்கள் கைது
பழனியை அடுத்த சத்திரப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் நாட்ராயன் மகன் மணிகண்டன்(45). இவர் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அரிசிக்கடை வைத்துள்ளார். சனிக்கிழமை கடையில் கூட்டம்
பழனி அருகே அரிசி கடையில் அரிசி வாங்குவது போல நடித்து பணத்தை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் பிடிபட்டனர்.
பழனியை அடுத்த சத்திரப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் நாட்ராயன் மகன் மணிகண்டன்(45). இவர் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அரிசிக்கடை வைத்துள்ளார். சனிக்கிழமை கடையில் கூட்டம் இருந்த நிலையில் இரண்டு பெண்கள் கையில் குழந்தையுடன் வந்து நின்று கொண்டு அரிசி வாங்குவது போல விலை விசாரித்துக் கொண்டும், அரிசி சாம்பிள் வாங்கி பார்த்துக் கொண்டும் நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் சென்றுவிடவே மணிகண்டன் கடையின் கல்லாவை பார்த்த போது அதில் இருந்த பணம் ரூ.17 ஆயிரத்து ஐநூறு மாயமாகியிருந்தது. இதைத் தொடர்ந்து விலை விசாரித்து இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்த போது அவர்கள் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கையும், களவுமாக அவர்களை பிடித்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள் இருவரும், திருச்சி மாவட்டம் மணப்பாறை எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகன் மனைவி லதா(29), மகள் தீபா(2), ஆறுமுகம் மனைவி லட்சுமி(30), மகள் காயத்திரி(4மாதம்) என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சத்திரப்பட்டி போலீஸார் மணிகண்டன் புகாரின் பேரில் இருவரையும் குழந்தைகளுடன் கைது செய்தனர்.