என்ஜின் டிரைவர், உதவியாளர் தகராறில் ரயில் வருகை தாமதம்
பழனியில் ரயில் என்ஜின் டிரைவருக்கும், உதவியாளருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் இருந்து பழனி வரும் ரயில் அரைமணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்து சேர்ந்தது.
பழனியில் ரயில் என்ஜின் டிரைவருக்கும், உதவியாளருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் இருந்து பழனி வரும் ரயில் அரைமணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்து சேர்ந்தது.
பழனியில் புதிய அகலரயில் பாதை பணிகள் முடிந்த பின் பழனி முதல் திண்டுக்கல், மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரவு 9 மணிக்கு கிளம்பும் ரயில் பழனிக்கு காலை 7.45 அளவில் வந்தடையும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து பழனி வந்த ரயிலுக்கு திண்டுக்கல்லில் டிரைவர் மாறுதல் நடைபெற்றது.
இதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் டிரைவராகவும், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் உதவியாளராகவும் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். திண்டுக்கல்லில் இருந்தே முத்துக்குமார் ரயிலை வேகமாக ஓட்டி வந்துள்ளார். சிக்னல்கள், லெவல் கிராசிங்குகளில் மிதமாக செல்லாமல் அதே வேகத்தில் சென்றதால் நாகலிங்கம் வேகத்தை குறைக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், அவரே இயந்திரங்களின் செயல்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளார். இதனால் முத்துக்குமாருக்கும், நாகலிங்கத்துக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தை தாண்டிய நிலையில் பிரச்னை முற்றி நாகலிங்கத்தை அருகே இருந்த இரும்பு கம்பியால் முத்துக்குமார் தாக்கியுள்ளார். இதனால் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் இறங்கிய நாகலிங்கம் நிலைய மேலாளரிடம் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பழனிவரை ரயிலில் செல்லுமாறு தெரிவித்த நிலைய மேலாளர் உடன் ஒருவரை பாதுகாப்புக்கு அனுப்பியுள்ளார். பழனி வந்தபின் நாகலிங்கம் பழனி நிலைய மேலாளரிடம் புகார் செய்து விட்டு மேலதிகாரிகளுக்கும் தான் புகார் செய்யப்போவதாக தெரிவித்து விட்டார். இந்த இருவரது பிரச்னையில் காலை 7.45க்கு பழனி வரவேண்டிய ரயில் 8.20க்கு வந்து சேர்ந்தது. இதே ரயில் மீண்டும் திண்டுக்கல் செல்ல வேண்டி இருந்ததால் மாற்று ஓட்டுனரை அழைத்து ரயில் மீண்டும் திண்டுக்கல் புறப்பட்டது. இதனால் திண்டுக்கல் செல்லும் ரயிலும் 10 நிமிடம் தாமதமாக கிளம்பி சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.