பழனி அருகே ஆடுகள் மர்மமான முறையில் மரணம்.
பழனி அருகே மர்மமான முறையில் ஒரே இரவில் 13க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் கவலைக்கிடமாக நிலையில் உள்ளது. பழனியை அடுத்த நெய்க்காரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது.
பழனி அருகே மர்மமான முறையில் ஒரே இரவில் 13க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் கவலைக்கிடமாக நிலையில் உள்ளது. பழனியை அடுத்த நெய்க்காரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதிகளில் சமீபகாலமாக பருவமழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏராளமான அடித்தட்டு மக்கள் ஆடு, மாடு வளர்ப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கோமாரி நோயால் மாடுகளுக்கு ஏராளமான செலவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஆடுகளுக்கும் திடீரென மர்மநோய் தாக்கி வருகிறது. காவலப்பட்டி அருகே உள்ள கொட்டாப்புளிசெட் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு உள்ளது. இவர்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு கிடைக்கு வந்த ஆடுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்தது. வாயில் உமிழ்நீர் ஒழுக, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இவை இறந்துள்ளது. இறந்த ஆடுகளின் வயிறு உப்பிய நிலையில் இருந்தது. முனியாண்டி என்பவரது 5 ஆடும், பாலுச்சாமி என்பவரது 4 ஆடும் இறந்தது அதிக எண்ணிக்கை ஆகும். இதுதவிர ஏராளமானோரது ஆடுகள் ஒரிரண்டு இறந்ததும் ஓடைக்குள் புதைத்துள்ளனர்.
சிலரது ஆடுகளை இறைச்சிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து நெய்க்காரபட்டி கால்நடை மருத்துவர் நளினிக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் மருத்துவர் கேசவன் உள்ளிட்டோர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொண்டது. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே பகுதியில் மேய்ச்சல் மேற்கொண்ட நிலையில் குறிப்பிட்ட ஆடுகள் மட்டுமே இறந்தது மர்மமாக உள்ளது. மேலும் பலரது வீட்டின் கிடையில் உள்ள ஆடுகள் நோய் தாக்கப்பட்ட அறிகுறியுடன் தளர்ச்சியாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது.
இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது, மேற்படி இறந்த ஆடுகள் ஏதாவது விஷச்செடிகளையோ, மருந்துகள் தெளிக்கப்பட்ட செடிகளையோ சாப்பிட்டிருக்கலாம். பலகீனமாக உள்ள ஆடுகளுக்கு ஊசிகள் போடப்பட்டு குளுகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. பிற ஆடுகளை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இறந்த ஆடுகள் எதனால் இறந்தது என்பதை கண்டறிய திண்டுக்கல் கால்நடைத்துறையில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு வரவுள்ளது என தெரிவித்தார்.