பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்: பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை பற்றி...
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தினமான இன்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் கடந்த சில மாதங்களாக இரு நாடுகளும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கனில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது கடந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர்.
போர்நிறுத்தம் தொடர்பாக சீனா மற்றும் வளைகுடா நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக அமைதி பேச்சுவார்த்தை மேலும் நடத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை காரணமாக கடந்த மார்ச் 18 முதல் மார்ச் 23 நள்ளிரவு வரை இரு நாடுகளும் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டன.
தற்காலிக போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில், பாகிஸ்தான் தினமான இன்று பாக். வெளியுறவுத் துறை அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. ஆப்கனில் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அதனை நோக்கியதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆப்கானிஸ்தானுக்குள் எடுக்கப்பட்ட நமது ராணுவ நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய உறுதிபாட்டின் சின்னம். நமது தேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் போர் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.