ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்வது குறித்து...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
பாகிஸ்தான் அரசின் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் புதன்கிழமை (ஏப். 15) அன்று அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப். 15 முதல் ஏப். 18 வரையிலான இந்த 4 நாள் பயணத்தில் பிரதமர் ஷரீஃப் அந்நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், துருக்கியில் நடைபெறும் அண்டல்யா தூதரகக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ஷரீஃப், அந்நாட்டின் அதிபர் ரெசப் தயீப் எர்டோகனை நேரில் சந்தித்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த மத்தியஸ்தம் குறித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளும் பங்கேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.