முகப்பு
தற்போதைய செய்திகள்

நகர மக்களுக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க திமுக உறுப்பினர் கோரிக்கை

தமிழகஅரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவை சுற்றுப்புற கிராமங்களில் வழங்கப்பட்டுள்ளது. நகர மக்களுக்கு எப்போது வழங்கப்படும். விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

தமிழகஅரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவை சுற்றுப்புற கிராமங்களில் வழங்கப்பட்டுள்ளது. நகர மக்களுக்கு எப்போது வழங்கப்படும். விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர் ரா.வெங்கடேசன் நகரமன்றக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2014-15 ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 13.81 கோடியில் கட்டடங்கள், 1.42 கோடியில் வடிகால்கள், ரூ.80 லட்சத்தில் வாகனம், ரூ 4 கோடி 8 லட்சத்தில் தார்சாலைகள், ரூ.10 லட்சத்தில் தெரு பெயர் பலகைகள், ரூ.85 லட்சத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விபரம்.

ரா.செந்தில்குமார் (துணைத் தலைவர்)- சிதம்பரம் நகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அனைத்து கட்டடங்களும் பராமரிக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலக கட்டடம், மீன்மார்க்கெட் கட்டடம், பணியாளர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பணிகளில் 65 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எல்.சீனுவாசன் (மதிமுக)- ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.

அப்பசந்திரசேகரன் (திமுக)- எனது வார்டில் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் திரிந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- பேரறிவாளர், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்த நீதிபதி சதாசிவத்திற்கும், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நகரில் தாழ்வான பகுதியில் உள்ள 1,2,3,4 ஆகிய நான்கு வார்டுகளில் வடிகால்கள் தூர்ந்து போய் நீர் தேங்கி நிற்கிறது. எனவே மழைக்காலத்திற்கு முன்பு தூர்வார வேண்டும். 1-வது வார்டில் புறவழிச்சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு உதவிஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடத்தை தேர்வு செய்யலாம்.

ஏ.ஆர்.சி.மணி (திமுக)- தெற்குசன்னதி, பாவா முதலியார் தெரு ஆகிய இரு இடங்களில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும். நகரமன்றத்தில் இரு உறுப்பினர்கள் இறந்துவிட்டனர். இதுகுறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதா?

மேலாளர் ராமானுஜம்- அரசுக்கு மாதந்தோறும் தகவல் அனுப்பி வருகிறோம். தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்துள்ளோம். சில திருத்தங்கள் செய்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர். தேதி அறிவித்தால் தேர்தலை நடத்த நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

ரா.வெங்கடேசன் (திமுக)- மானாசந்து மேல்நிலைத்தேக்கத் தொட்டி நீர் உப்புநீராக உள்ளது. இதனை 10 வார்டு மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே அங்கு புதிய போர்வெல் அமைக்க வேண்டும். கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் வெளிநடப்பு: இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு எடுத்த தமிழகஅரசை கண்டிப்பதாக கூறி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகமதுஜியாவுதீன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.