மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் வழக்கு: பறவை பாதுஷா கைது
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் 17.5 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பறவை பாதுஷாவை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் 17.5 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பறவை பாதுஷாவை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
2013-ம் ஆண்டில் வேலூர், சேலம் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. பிரதிநிதிகள் கொலை செய்யப்படதைத் தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்த போலீஸார், 2013-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடத்திய திடீர் சோதனையின்போது மேலப்பாளையம் பங்களப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக முகமதுதாசின், சாகுல்ஹமீது என்ற கட்டசாகுல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதன்பின்பு நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஒரு துப்பாக்கி, ரூ.6 லட்சத்து ஆயிரத்து 640 ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நீதிமன்றத்தில் ஜனவரி மாதத்தில் 19 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ் வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் ஹாமீன்புரத்தைச் சேர்ந்த காஜாமுகைதீன் மகன் முகமது ஷாகுல் ஹமீது என்ற பறவை பாதுஷாவை (28) போலீஸார் தேடி வந்தனர். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அஞ்சல் என்ற ஊரில் பதுங்கியிருந்த பறவை பாதுஷாவை, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பெஸ்கி, ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1-ன் நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்பு அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பறவை பாதுஷாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், திங்கள்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பறவை பாதுஷாவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திங்கள்கிழமை போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.