ஆதிதிராவிட நலத்துறையில் ஆசிரியர்கள் பணம் முறைகேடு: சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் பணம் லட்சக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில புலனாய்வு விசாரணைக்கு
சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் பணம் லட்சக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில புலனாய்வு விசாரணைக்கு (சிபி சிஐடி) உத்தரவிட வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் உதவிஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை உதவிஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில்: சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலக ஆவணங்கள் அறை நவ.26-ம் தேதி மர்மமான முறையில் தீவிபத்தில் எரிந்து முற்றிலும் சேதமுற்றது.
இந்நிலையில் ஆசிரியர்களின் சேமநல நிதி பிடித்தம் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் கணக்கில் வரவு வைக்கப்பாடமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முக்கிய ஆவணங்கள் தீவிபத்தில் எரிந்து போய் உள்ளன. எனவே ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்தும், பணம் முறைகேடு செய்யப்பட்டது குறித்து மாநில புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.