நெல்லை அருகே விபத்து: லாரி ஓட்டுநர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (33). இவர் சென்னையில் லாரி
திருநெல்வேலியை அடுத்துள்ள நடுக்கல்லூரில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் வியாழக்கிழமை இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (33). இவர் சென்னையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெனீபர் (30). இத் தம்பதிக்கு கௌதம் (7), கௌஷினி (3) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வந்திருந்த லட்சுமணன், காணும்பொங்கலை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கு பைக்கில் புதன்கிழமை வந்தாராம். பல்வேறு பகுதிகளையும் சுற்றிபார்த்துவிட்டு இரவு பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
சுத்தமல்லியை அடுத்துள்ள நடுக்கல்லூர் பகுதியில் சென்றபோது இவரது பைக்கும், எதிரே வந்த பைக்கும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் லட்சுமணன், கௌதம், மற்றொரு பைக்கில் வந்த குன்னத்தூரைச் சேர்ந்த கரிகாலபாண்டியன், சுதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெனிபரும், கௌஷினியும் லேசான காயத்துடன் தப்பினர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த லட்சுமணன் வியாழக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.