தைப்பூசத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் தீர்த்தவாரி: திரளான மக்கள் பங்கேற்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர் தவத்தை ஏற்று தைப்பூச நாளில் சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீநடராஜர் கோயிலில் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் ஸ்ரீநடராஜப் பெருமாளை பார்த்துக் கொண்டு செல்ல, பின்னே பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. நடராஜர் கோயிலில் ஆதிமூலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பஞ்சமூர்த்திகள், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி எழுந்து தீர்த்தவாரி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீர்த்தவாரியை கண்டு தரிசித்து மகிழ்ந்தனர். பின்னர் சித்சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நடராஜப் பெருமானுக்கு ரவா கேசரி செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.