அண்ணாமலைப் பல்கலையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன தனிப்பிரிவு: கே.தனவேல் ஐஏஎஸ் தகவல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன தனிப்பிரிவு (CELL) நிரந்திரமாக அமைக்கப்படும் என தமிழகஅரசு குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன தனிப்பிரிவு (CELL) நிரந்திரமாக அமைக்கப்படும் என தமிழகஅரசு குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனச் செயலாளர் கே.தனவேல் ஐஏஎஸ் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து வேளாண் தொழில் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம், மகளிருக்கான தொழில் மேம்பாட்டு குறித்த கருத்தரங்கு ஆகிய 4 வகையான திட்டம் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக டெக்பார்க் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்ற விழாவில் தமிழகஅரசு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனச் செயலர் கே.தனவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:
1950-ல் இந்திய பொருளாதாரத்தில் வேளாண்துறை பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேல் இருந்தது. தற்போது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற சர்வீஸ் செக்டார்களின் பங்களிப்பு அதிகரித்ததால், மக்களின் வேளாண்துறை பங்களிப்பு 8.34 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்தியப் பொருளாதாரத்தில் மீண்டும் வேளாண்துறை பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு மற்றும் குறுதொழில் மையத்தில் 8.51 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ரூ.50 கோடிக்கு உற்பத்தி செய்கின்றனர். தமிழகத்தில் இந்த சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களையும், ரூ.5 கோடி நிதியையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதனை தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் வெளிநாட்டு சென்று, அங்கு தங்களது கண்டுபிடிப்புகளை வழங்குகின்றனர். அந்த தொழில்நுட்பத்தை, வெளிநாட்டு தொழில்நுட்பம் என நாம் பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும். இந்தியா எதிலும் குறைந்த நாடு கிடையாது. கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தை நாமே பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும்' என கே.தனவேல் தெரிவித்தார்.
தமிழக அரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில்: இளைஞர்களுக்கு தொழில்முனைவோருக்கான பயிற்சி மிகவும் தேவையானது. உபயோகமாகவும் இருக்கும். இப்பயிற்சியின் மூலம் செய்முறை அறிவும், அனுபவமும் கிடைக்கும். எனவே மாணவர்கள் இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழகஅரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் எஸ்.முருகையா திட்டவிளக்கவுரையாற்றினார். முன்னதாக திட்ட ஒருங்கிணைப்பாளரும், பல்கலைக்கழக வேளாண்புல முதல்வருமான ஜே.வசந்தகுமார் வரவேற்றார். தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குநர் கே.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், மாலினி, கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் கே.கதிரேசன் மற்றும் புல முதல்வர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.