முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசுதின விழா

சிதம்பரம் பகுதியில் பல்வேறு அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 65-வது ஆண்டு குடியரசுதின விழாக்கள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் பல்வேறு அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 65-வது ஆண்டு குடியரசுதின விழாக்கள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசுதின விழாவில் தமிழகஅரசு முதன்மை செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தி குடியரசு தின விழா உரையாற்றினார். பின்னர் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 9 இளம் செஞ்சிலுவை மாணவர்கள் சிறந்த தன்னார்வலர்கள் விருதினை நிர்வாகி வழங்கினார்.  இவ்விழாவில் என்சிசி கமாண்டிங் அதிகாரி ஒய்.எஸ்.பார்மர், பதிவாளர் என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரியும், சிறப்பு அலுவருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தேர்வுக்கட்டுப்பாட்டி அதிகாரி ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

அரசு அலுவலகங்கள்: சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எம்.விஜயா,  நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.

பள்ளிகள்: ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன்  தலைமையில் நடைபெற்ற விழாவில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றினார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் வரவேற்றார்.

காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா மற்றும் சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமையில் 12-ம் வகுப்பு மாணவி ஏ.விஜயலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியைர ஜி.சக்தி முன்னிலை வகித்தார். உதவிஆட்சியர் எம்.அரவிந்த் விவேகானந்தர் 150வது ஆண்டு பிறந்தநாள் ஆசிரியர்-மாணவர் எழுச்சி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி ரத்தின.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் ஆ.சீத்தாராமன் தேசியக்கொடி ஏற்றினார். பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் சி.என்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் பட்டதாரி ஆசிரியர் எஸ்.அகிலாண்டேஸ்வரி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மூத்த வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் தேசியக்கொடி ஏற்றினார். ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமையில், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார் தேசியக்கொடி ஏற்றினார்,

காட்டுமன்னார்கோயில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் வி.முத்துக்குமரன் தலைமையில் கூட்டுறவு வங்கி முன்னாள் மேலாளர் எஸ்.ராமநாதன் தேசியக்கொடி ஏற்றினார். சிட்டியூனியன் வங்கி அதிகாரி கதிர் பரிசுகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.