விருதுநகர் மாவட்டத்தில் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி உடனே ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிரைவண்ணான் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிரைவண்ணான் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தாமதம் செய்து வருகின்றனர். இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மனு அளிப்பதற்கு ஆட்சியரிடம் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக புதிரைவண்ணான் அமைப்பின் எழுச்சி பேரவையின் சார்பில் தலைவர் செல்லக்கண்ணு, ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய வட்டார பகுதிகளில் கனிசமான அளவில் எங்கள் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட வட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். அதன் அடிப்படையில் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் விசாரணை செய்தனர். அதோடு, விரைவில் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர். ஆனால், இதுவரையில் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், எங்கள் சமூக குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது. எனவே இதைக்கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் புதிரைவண்ணான் எழுச்சி பேரவை அமைப்பின் தலைவர் செல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.