சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாஜக கோரிக்கை
சிதம்பரம் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகர பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவர் தா.சிவசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆர்.எஸ்.வைரபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் பா.அஸ்வின்குமார், மாவட்ட பாஜக செயலாளர் துறைமுக செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, பாஜக நகரத் தலைவர் திருமாறன், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அ.முரளி நன்றி கூறினார்.
கூட்டத்தில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலமான் ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொடுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும், பாலமான் ஆற்றினை தூர்வார வேண்டும், சிதம்பரம் நகராட்சி சார்பில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும், சென்னை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு சிதம்பரத்திலிருந்து கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.