சிதம்பரம் அருகே எரித்துக் கொன்று புதைக்கப்பட்ட தலித் பெண் சடலம் தோண்டி எடுப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் புதைக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலத்தை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் புதைக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலத்தை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.
சிதம்பரம் அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள் சீதா (31). இவரும், பெருமாத்தூரைச் சேர்ந்த சரவணன் (28) என்ற வாலிபரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். சீதா அதே பகுதியில் உள்ள சுத்திகரிக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 19-ம் தேதி வேலைக்கு சென்ற சீதா காணவில்லை. இதுகுறித்து சீதாவின் தந்தை பஞ்சநாதன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இதனையடுத்து கணவர் சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஜூலை 15-ம் தேதி சரணடைந்தார். சரணடைந்த சரவணனை நீதிபதி கார்த்திகேயன் புவனகிரி போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சரவணனை கைது செய்த புவனகிரி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகியோர் சேர்ந்து சீதாவை சிதம்பரம் அருகே சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார்டனுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அந்த உடலை அங்கேயே புதைத்தது தெரிய வந்துள்ளது. பின்னர் புவனகிரி போலீஸார் சீதா காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி கணவர் சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். கணவர் சரவணனின் தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கார்டனில் எரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சீதாவின் உடல் சனிக்கிழமை, வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம் (அண்ணாமலைநகர்), ராஜேஷ்ராஜ் (புவனகிரி) ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்தப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி தடயஅறிவியல் துறை பேராசிரியர்கள் டாக்டர் கீதாஞ்சலி, டாக்டர் ஆர்த்தி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். காவல்துறை தடயஅறிவியல் துறை நிபுணர்கள் டாக்டர் மல்லிகா, சண்முகம் ஆகியோர் தடயங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.