நெல்லையில் 70 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர்,
திருநெல்வேலி நகரத்தில் 70 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கருணாகரன் சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார்.
அதன்பேரில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காளிமுத்து, சங்கரலிங்கம், இப்ராஹிம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருளை எடுத்து பகுப்பாய்வு செய்து, சுமார் 70 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமாமகேஸ்வரி முன்பு சுரேஷை ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தார். புகையிலை தயாரிப்பு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.