சிதம்பரம் அருகே வீட்டில் 3.5 கிலோவாட் சூரிய மின்சார உற்பத்தி துவக்கம்
சிதம்பரம் அருகே வீடு ஒன்றில் 3.5 கிலோவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சார திட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் அருகே வீடு ஒன்றில் 3.5 கிலோவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சார திட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் அருகே மணலூர் பகுதியில் உள்ள முருகப்பிரியா நகரில் வசிப்பவர் செல்வமுத்துகுமார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்தியில் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றும் இவர் மின்வெட்டை சமாளிக்கவும், கூடுதலான மின்கட்டணத்தை சமாளிக்கவும் அவரது வீட்டு மாடியில் ரூ 3.75 லட்சம் செலவில் 3.5 கிலோவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
பணி முடிவுற்று வெள்ளிக்கிழமை சூரியமின் உற்பத்தி திட்ட தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சூரிய மின்உற்பத்தி திட்டத்தை இயக்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரியத்துறை சிதம்பரம் கிளை செயற்பொறியாளர் ச.பாலசுப்பரமனியன், பொறியாளர் கவிதா, சூரிய மின்சாரத்தை வீட்டில் நிறுவிய காட்டுமன்னார்கோயில் தலைமையிடமாக போகஸ் பவர் சொலுஷன் நிறுவன நிறுவனர்கள் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் சங்க செயலாளர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூரிய மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க வேண்டியவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: 98425 67103.
சூரிய மின் உற்பத்தி குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பரமனியன் தெரிவித்தது: மக்கள் மத்தியில் சூரிய ஓளி மின்சாரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வீட்டில் ஒரு நாளைக்கு 40 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் ஏர்கண்டீஷன் உள்ளிட்ட அனைத்து மின் உபயோகப் பொருட்களையும் உபயோகபடுத்தினால் நாள் ஒன்று 21 யூனிட் மின்சாரம்தாம் செலவாகும். மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்தின் அனுமதி பெற்று அருகில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்யலாம் அல்லது மின்வாரியத்துறைக்கு விற்கலாம். இதே போன்று அனைத்து மக்களும், அவர்களுக்கு தேவையான சூரிய மின்உற்பத்தியை அவரது வீட்டில் அமைத்துக் கொண்டால் மின்உற்பத்தியில் புரட்சி ஏற்படும். தமிழகத்தில் மின் தட்டுப்பாடும் இருக்காது என ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.