சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 49-வது ஆண்டு ஆராதனை விழா!
சிதம்பரம் குருஐயர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 49-வது ஆண்டு ஆராதனை விழா புதன்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் குருஐயர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 49-வது ஆண்டு ஆராதனை விழா புதன்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள் புரிந்து வருபவர் மகான் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள். ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகளின் பிரதான சீடரான ஸ்ரீசிந்தாலய ஈசன் சுவாமிகள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், போத்தங்கோடு, கள்ளிக்காடு, நெய்யாத்தங்கரை ஆகிய இடங்களில் குருவான அவதூத சுவாமிகளுக்கு ஆசிரமங்கள் அமைத்து தினமும் பிரார்த்தனை, பூஜை, ஆராதனை நடத்தி வருகிறார்.
சிதம்பரத்தில் உள்ள அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் தினமும் இருவேளை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாதம் தோறும் பெளர்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்த அதிஷ்டானத்தில் புத்திரபாக்கியம், திருமணதடை, நாகதோஷம், ஏழரைச்சனி, அஷ்டமத்துசனி, கடன் தொல்லை, குடும்பத்தொல்லை, மன அமைதியின்மை மற்றும் அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மீண்டு நிம்மதியடையலாம் என வரலாறு கூறுகிறது.
அவதூதசுவாமிகளின் சதய நட்சத்திரம் தினமான புதன்கிழமை காலை 8 மணிக்கு அவரது அதிஷ்டானத்தில் கணபதி ஹோமம் தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், சமக ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் தொடங்கி நடைபெற்றன. பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் ஆராதனை விழாவில் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அதிஷ்டான அறக்கட்டளை நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், தோப்பு கே.சுந்தர், பொறியாளர் ஹரிஹரநாகநாதன், வழக்குரைஞர் ராமச்சந்திரன், சங்கரநடராஜ தீட்சிதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.