சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை மதியம் 2 மணிக்குள் முடிக்க உத்தரவு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூலை 4-ம் தேதி நடைபெறவுள்ள ஆனித்திருமஞ்சன தரிசனத்தை பிற்பகல் 2 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களுக்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூலை 4-ம் தேதி நடைபெறவுள்ள ஆனித்திருமஞ்சன தரிசனத்தை பிற்பகல் 2 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களுக்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்வது குறித்து உதவிஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்தது: ஆனித்திருமஞ்சன தரிசனத்திற்கு சிசி கேமரா பொருத்துவது, தற்காலிக கழிப்பறைகள் அமைப்பது குறித்து பணிகளை பொதுதீட்சிதர்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆருத்ரா தரிசனம் போது பிற்பகல் 2 மணிக்குள் தரிசனத்தை முடிப்பது என ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.45 மணிக்கு தரிசனம் நடத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். காலதாமதம் குறித்து தீட்சிதர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டு பெறப்பட்டது. இந்த முறை மக்கள் நலன் கருதி தரிசனத்தை பிற்பகல் 2 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உதவிஆட்சியர் தெரிவித்தார்.
டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தது: தேர்திருவிழா மற்றும் தரிசனத்தின் போது போதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சீரமைப்பு செய்யப்படும். குற்றங்களை தடுக்க சிசி கேமரா பொருத்தவும், சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
கூட்டத்தில் தேர் மற்றும் தரிசன நாட்களில் அசைவ ஹோட்டல்கள மூடுவது, மதுபானக்கடையை மூட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, நகராட்சி நிர்வாகம் சுகாதாரப்பணிகளை மேற்கொள்வது, தயார் நிலையில் தீயணைப்புத்துறை வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றை கோயில் வளாகத்தில் நிறுத்துவது, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகளை சீரமைப்பது, அன்னதானம் வழங்குபவர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பத்மனாபனிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அரசு வழக்குரைஞர் சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், பி.முருகானந்தம், வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் ஆய்வாளர் ஆர்.அசோகன், கிராமநிர்வாக அலுவலர் திருமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சா.வைத்தியநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், மின்வாரிய உதவிப் பொறியாளர் மாலதி, இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன், நிர்வாகிகள் ஜோதிகுருவாயூரப்பன், சந்திரசேகரன், பக்தர் பேரவை சி.எஸ்.பாலசுந்தரம், பொதுதீட்சிதர்களின் செயலாளர் பாஸ்கர தீட்சிதர், நகரமன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.