ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 290 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை கிராமத்தில் பொது இடத்தை மீட்டு, பள்ளிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலைமறியலில்
ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை கிராமத்தில் பொது இடத்தை மீட்டு, பள்ளிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் அரசு நிலை ஏல தரிசு நிலமான பொதுஇடம் நாலு ஏக்கர் 60 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் தனியார் யூக்கலிப்ட்ஸ் மரம் நட்டு பயிர் வைக்கப்பட்டுள்ளது. 2007-ல் நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொது இடத்தை தனியாருக்கு பட்டா கொடுத்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் 2011-ல் அங்குள்ள அரசு மகளிர் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. அப்பள்ளிக்கு மேற்கண்ட பொது இடத்தில் கட்டடம் கட்டுவது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15 நாட்கள் முன்பு வருவாய்த்துறையினர் தனியாருக்கு சாதமாக அரசு பதிவேட்டில் பட்டா கணக்கை திருத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதிமக்கள், திருத்தம் செய்த அதிகாரிகளை கண்டித்தும், பள்ளிக் கட்டடம் கட்ட அந்த இடத்தை ஒதுக்கித் தரக்கோரியும் ஸ்ரீமுஷ்ணம்-சிதம்பரம் செல்லும் சாலையில் நாச்சியார்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட 290 பேரை கைது செய்தனர்.