இந்து சமய அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இராமகோபாலன்
இந்து சமய அறநிலையத்துறை தனக்கு வரும் வருவாய், செலவினம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் தெரிவித்துள்ளார்.பழனி பேருந்து நிலைய ரவுண்டானா
இந்து சமய அறநிலையத்துறை தனக்கு வரும் வருவாய், செலவினம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
பழனி பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான பழனியாண்டவர் கல்லூரியில் மாற்று மதத்தினருக்கு பணிநியமனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதையும், படிவழிப்பாதைகளில் உள்ள மாற்றுமதத்தினர் கடைகளை நீதிமன்ற உத்திரவின் பேரில் அகற்றாமல் காலதாமதம் செய்வதையும் கண்டித்து இந்து முன்னணி மற்றும் பழனி மலைக்கோயில் பாதுகாப்பு பேரவை சார்பிலும் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் திருமலைசாமி, காடேஸ்வரா சுப்ரமணியம், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் ஜெகன், கனகராஜ், பழனி மலைக்கோயில் பாதுகாப்பு பேரவை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சுமார் 43 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 4 இலட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இவை பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு திருக்கோயில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட கடை ரூ.500க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் அருகே உள்ள அதே அளவு இடம் தனியாரால் ரூ.5,000க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பு அதிகாரிகளாலேயே ஏற்படுகிறது.
கோயில்களுக்கு வரும் வருவாய் அதிகாரிகளின் சம்பளத்துக்கும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளுக்குமே செலவிடப்படுகிறது. பக்தர்கள் ஆடு,மாடு போல நடத்தப்படுகிறார்கள். கழிப்பிடம், குளியலறை போன்ற எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை. திருப்பதியில் உள்ளது போல மூன்றில் ஒரு பங்கு கூட இங்கு இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்களில் பலகோடி மதிப்புள்ள பழைய விக்கிரகங்கள் அப்படியே உள்ளனவா அல்லது போலியானவை வைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு எந்தந்த இனங்களில் வருவாய் வருகிறது. அது எந்தெந்த இனங்களுக்கு செலவு செய்யப்படுகிறது என்ற வெள்ளை அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும். வக்போர்டு சொத்துக்களை மீட்க அரசு முயற்சி மேற்கொள்வது போல ஏன் இந்துக்கோயில்கள் சொத்தை மீட்க முடியாது. இதற்கென ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் குழு நியமிக்க வேண்டும். ஊழல் செய்யும் திருக்கோயில் அதிகாரிகளை பாரபட்சமின்றி வெளியேற்ற வேண்டும். இந்துக்களின் தெய்வாம்சம் பொருந்திய ஜீவனாக வணங்கப்படுவது பசு.
கோதானமும், அதற்கு ரூபாய் ஆயிரமும் விவசாயிகள் கொடுத்தாலும் அவற்றை பராமரிக்க திருக்கோயில்கள் கோசாலைகளை சரியாக நிர்வகிப்பதில்லை. பசுவதை சட்டம் கொண்டு வரப்படவேண்டும். பசுக்களை பராமரிக்க கோசாலைகளுக்கு புறம்போக்கு நிலங்களில் இடவசதி, தண்ணீர் வசதி செய்து தரப்படவேண்டும். புதிய சிந்தனைகள் அரசுக்கு தேவை. நதிகளை இணைத்தால் வறட்சி நீங்கும். மின்சாரம், விவசாயம், நீர்வழி போக்குவரத்து மேம்படும். இந்து கட்சி நிர்வாகிகள் தாக்கப்படுவதை அரசு கண்டுகொள்வதில்லை. குற்றவாளி சுதந்திரமாக சுற்றிவரும் நிலையில் காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறோம் என பொய் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பாஜக பிரதம வேட்பாளர் மோடிக்கு அலை வீசவில்லை. சூறாவளி வீசுகிறது. இளைஞர்கள் அவர் படத்தை பச்சை குத்தியும், டிசர்ட்டில் வரைந்தும் சுற்றுகின்றனர். ஊழலில்லாத, தைரியமிக்க, நம்பகமான மனிதர் நரேந்திரமோடி என தெரிவித்தார்.