பழனியில் வாகன தணிக்கையின் போது ரூ.32 இலட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.1.60 இலட்சம் ரொக்கம் பிடிபட்டது
பழனியில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி வாகன தணிக்கையின் போது இருவேறு சோதனைகளின் போது ரூ.32 இலட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.1.60 இலட்சம் ரொக்கமும்
பழனியில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி வாகன தணிக்கையின் போது இருவேறு சோதனைகளின் போது ரூ.32 இலட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.1.60 இலட்சம் ரொக்கமும் பிடிபட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் மதிப்பிலான பொருட்களை கொண்டு செல்ல சரியான ஆவணங்கள் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி தமிழகமெங்கும் போலீஸார், வருவாய்துறையினருடன் இணைந்து வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாகன தணிக்கையின் போது பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை மண்டல தாசில்தார் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து பணி மேற்கொண்ட போது ஒரு காரில் ரூ.1.60 இலட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துச்சாமி என்றும், பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் அம்யூஸ்மெண்ட் என்ற ராட்டிண நிகழச்சியில் வசூலான தொகை என்றும் தெரிவித்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து பணம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல பைபாஸ் பகுதியில் தனி தாசில்தார் பால்ராஜ் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கண்ட போது கார் ஒன்றில் பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் இருந்ததைத் தொடர்ந்து அவை கைப்பற்றப்பட்டு பழனி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பழனி தாசில்தார் வரதராஜன் மேற்கொண்ட விசாரணையில், அவை தென்தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் நகைக்கடைகள் வைத்துள்ள பிரபலமாக தங்கநகைக்கடைக்கு வந்த நகைகள் என்று தெரியவந்தது.
மேற்படி கடை ஊழியர் தர்மராஜ் கொண்டு வந்த ஆவணங்கள் முன்பின் முரணாகவும், திருப்திகரமாக இல்லாததாலும் நகைகள் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட 1,340 கிராம் தங்கநகைகள், 4,216 கிராம் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.32 இலட்சமாகும். பிடிபட்ட ரொக்கம், நகைகளுக்கான ஆவணங்கள், வருமானவரி கட்டிய விபரம், எங்கிருந்து பெறப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற முழுத் தகவல்கள் வந்தபின் அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தாசில்தார் வரதராஜன் தெரிவித்தார்.