தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணிக்க கிராமங்களில் இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதற்காகவும், தகவல்களை தெரிவிப்பதற்காகவும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இளைஞர்
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதற்காகவும், தகவல்களை தெரிவிப்பதற்காகவும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. எனவே அரசியல் கட்சியினர் கிராம மக்களை குறி வைத்து பரிசு பொருள்கள் மற்றும் பணம் ஆகியவைகளை வழங்குவார்கள். இதுபோன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள் ஆகியவைகளை கண்காணிப்பதற்காகவும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலும் இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் இக்குழுக்கள் அமைப்பதற்கான பணிகள் முடிந்துள்ளது. இதில், முக்கியமாக இக்குழுவில் இடம் பெறுகிற இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாரத படித்த அல்லது பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். கிராமங்களில் பிரசாரங்கள் செய்யும் நேரங்களிலும், கிராம நிர்வாகிகளை சந்திக்கும் போதிலும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பார்கள்.
அதையடுத்து அரசியல் கட்சிகளின் ஆதாரவாளர்கள் மூலம் கிராமங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து விருந்து அளித்தல், பரிசு பொருள்கள் ஆகியவைகள் வழங்கப்படுகிறதா எனவும் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறை மீறல்கள் குறி்த்து தங்களிடம் உள்ள கைப்பேசி மூலம் படம் பிடித்து virudhunagar2014@compliantsgmail.com என்ற இணைய தள முகவரிக்கு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும், இது தொடர்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18004257039 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம். இக்குழுக்கள் அளிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவும் இருப்பதாக தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.