பாலாறு பொருந்தலாறு அணைப்பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம்
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை. இந்த மலையடிவாரத்தில் காட்டுமாடு, மான், யானைகள் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள்
பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணைப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டத்தின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிரண்டு போயுள்ளனர்.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை. இந்த மலையடிவாரத்தில் காட்டுமாடு, மான், யானைகள் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு வனப்பகுதியிலும் பிரதிபலிப்பதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் பகல் நேரத்திலும் மலையடிவாரத்துக்கு வந்து அணைப்பகுதியில் நீர் அருந்தி செல்கின்றன. சமீப காலமாக காட்டுயானைகள் கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மிரண்டு போய் உள்ளனர். கடந்த சிலகாலமாக காட்டு யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை ஒன்றும் விவசாய நிலங்களில் புகுந்து நிலங்களில் பொருட்சேதம் ஏற்படுத்தி வருகிறது.
பல இடங்களிலும் மாலை வேளைகளில் விளைநிலங்களில் செல்ல விவசாயிகள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு சுமார் 7 யானைகள் கொண்ட கூட்டம் பாலாறு பொருந்தலாறு அணையின் கரைவழியாகவே ஊருக்குள் புகுந்துள்ளது. இதைப் பார்த்து பொதுமக்கள் மிரண்டுபோய் சத்தம் போட்டு யானைகளை விரட்டியுள்ளனர். இந்த வேலை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்துள்ளது. காட்டுயானைகள் கூட்டம் பழனிக்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் நீரேற்று நிலையத்துக்குள் சென்று அருகேயிருந்த இரும்பு தடுப்பை உடைத்துள்ளன. பின்னர் மீண்டும் கரைவழியாகவே வனப்பகுதிக்குள் சென்றன. இதே போல கடந்த சிலவருடங்கள் மூன்பு உணவுத்தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது யானைகள் கூட்டம் பழனிக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளிகள் வரை வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் விதமாக அகழிகள், மின்சார வேலிகளை பராமரிப்பதும், வனப்பகுதிக்குள் விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்.