புதுவை : சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு
புதுச்சேரியில் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மாடுகளை வளர்ப்போர் சாலையில் திரியவிட்டால் ரூ.450 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. நகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், ரோட்டில் திரியவிடுவது தொடர்கதையாகி வந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மாடுகளை சாலையில் திரியவிட்டால் அதன் உரிமையாளர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் தீபக்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி நேரு வீதி, அண்ணாசாலை, சாரம், உருளையனண்பேட்டை சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வியாழக்கிழமை புதுச்சேரி நகராட்சி டாக்டர் குமரன் தலைமையிலான ஊழியர்கள் நகரபகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 5 மாடுகளை பிடித்து வந்தனர்.
அவற்றின் உரிமையாளர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாடுகளின் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகினறனர். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாடுகளை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.