பழனி அருகே தனியார் தோட்ட கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிருடன் மீட்பு
பழனியை அடுத்த ஆண்டிபட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகாமை கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் சுற்று வட்டாரப்பகுதிகள் பழனி, அமராவதி, உடுமலை மற்றும்
பழனி அருகே தனியார் தோட்ட கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
பழனியை அடுத்த ஆண்டிபட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகாமை கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் சுற்று வட்டாரப்பகுதிகள் பழனி, அமராவதி, உடுமலை மற்றும் கொடைக்கானல் வனப்பகுதியை எல்லையாக கொண்டுள்ளது. மேற்கண்ட வனப்பகுதிகளில் காட்டுயானை, பன்றிகள், காட்டுமாடு, சிறுத்தை, புலி,மான் மற்றும் பல்வேறு வகையான வனவிலங்குகள் பாதுகாப்பாக வசித்து வருகின்றன. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் மேற்குமலைத்தொடர்ச்சியில் கடும்வறட்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் இரைதேடி வனவிலங்குகள் விவசாயப் பகுதிக்கு வருவதும், அவற்றை விரட்டியடிப்பதும் தினசரி நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆண்டிபட்டி கிராமத்தை அடுத்த மண்திட்டு சுப்ரமணியம் என்பவர் தோட்ட கிணற்றில் இரைதேடி வந்த சிறுத்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. வியாழக்கிழமை இரவு விழுந்த சிறுத்தையை வெள்ளிக்கிழமை தோட்டக்காரர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகம் மற்றும் உடுமலை வனச்சரகத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு மூணாறு செல்லும் வழியில் உள்ள பேரிடர் மேலாண்மை மைய வீரர்களுடன் சம்பவ இடத்து வந்து சேர்ந்தனர். சிறுத்தையை மீட்க வசதியாக வலைகள், மூங்கில்கள், மயக்க மருந்து நிரம்பிய குண்டுகளுடன் துப்பாக்கிகள், ஏணிகள் என அனைத்தும் கொண்டு வரப்பட்டது.
சிறுத்தை விழுந்திருந்த கிணறு சுமார் 65 அடி உயரமும், 25 அடி வரை நீர் நிரம்பியும் இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. வலையை விரித்து சுருக்கு மூலம் புலியை தூக்கிய சிலவினாடிகளில் அது குதித்து தண்ணீரில் இருந்து தப்பி கரையோரம் இருந்த பாறையில் பதுங்கியது. பின்னர் மீண்டும் வலை விரிக்கப்பட்டு சிறுத்தை கழுத்தில் சுருக்கு போடப்பட்டு வலையில் போடப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக வலை கிணற்றுக்கு மேலே கொண்டுவரப்பட்டு சிறுத்தை தரைப்பகுதியில் இறக்கப்பட்டது. சுருக்கு விடுவிக்கப்பட்டபின் சிறுத்தை வலையில் இருந்து வெளியேறி அனைவரையும் மிரட்டல் பார்வை பார்த்து விட்டு சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருந்த வனப்பகுதிக்கு தாவி ஓடி மறைந்தது. மீட்பு பணி சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து உடுமலை ரேஞ்சர் தங்கராஜ் கூறுகையில், கிணற்றில் விழுந்த சிறுத்தை சுமார் நான்கு வயதுடைய ஆண் சிறுத்தையாகும். உணவு தேடி வந்த நிலையில் இருட்டில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அமராவதி ரேஞ்சர் மாரியப்பன் கூறுகையில், வனப்பகுதிக்கு அருகாமையில் தோட்டம் வைத்துள்ளவர்கள் அதற்கு மூடி போடுவது அவசியம். வனவிலங்கை போல மனிதர்களும் தவறி விழ வாய்ப்பு உள்ளதால் இதை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.