முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயம் : டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்

சிதம்பரத்தில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததில் திண்டுகல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் சீனா செல்போன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

சிதம்பரத்தில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததில் திண்டுகல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் சீனா செல்போன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டில் வெடித்த வெடிகுண்டு: சிதம்பரம் மாரியாப்பாநகரில் வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. சத்தத்தை கேட்டு அருகாமையில் குடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். வெடிகுண்டு வெடித்ததில் வீட்டிலிருந்து திண்டுக்கல்லை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி படுகாயமுற்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி படுகாயம்: சிதம்பரம் மாரியப்பாநகர் 2வது தெற்கு குறுக்குத்தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு விட்டு அருகே உள்ள ஆட்டா நகரில் வசித்து வருகிறார். மாரியப்பாநகர் வீட்டில் தரைதளத்தில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள் (30) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு அருள் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் திண்டுக்கல் நாகல்நகர் 4வது தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் மோகன்ராம் (34) படுகாயமுற்றார். அப்போது அவரை மற்ற இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, துப்பாக்கி கைப்பற்றப்பட்டன: தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீனா (அண்ணாமலைநகர்), பி.முருகானந்தம் (சிதம்பரம்), ரவீந்திரராஜ் (புவனகிரி), லாமேக் (பரங்கிப்பேட்டை) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து மேலும் இருந்த வெடிகுண்டு மற்றும் வெடிமருந்துகள் வெடிக்காமல் இருக்க தண்ணீர் அடித்தனர். போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வீட்டிலிருந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, சீனா செல்போன், துப்பாக்கி மற்றும் டைரி உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட டிபன்பாக்ஸ் வெடிகுண்டை சிதம்பரம் அருகே கவரப்பட்டு ரோட்டில் வயல்வெளியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மணிமாறன், தலைமைக்காவலர்கள் ராஜாராம், பாபு, பாஸ்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்ரண்டன்ட் ஆய்வு: இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெடிக்குண்டு வெடித்து படுகாயமுற்று ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மோகன்ராமை பார்வையிட்டு, சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்தார். வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதா? என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெடிகுண்டு வெடித்த தகவல் சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வெகு, வேகமாக பரவியதால், மாரியாப்பாநகரில் வெடிகுண்டு வெடித்த வீட்டை காண மக்கள் திரண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments