முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண்ணில் 5 சதவிகிதம் சலுகை அளிக்கப்பட்டது. இதனால் 55 சதவிகித மதிப்பெண்கள் (அதாவது 82 முதல் 89 மதிப்பெண்கள்) பெற்று முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

2 ஆவது தாளில் தேர்ச்சி பெற்ற 25,186 இடஒதுக்கீடு பிரிவினர்கள் பட்டியல் மற்றும் அவர்களின் மதிப்பெண் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திருநெல்வேலி உள்பட தமிழகத்தில் 29 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணி மே 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அவ்வாறு திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 1205 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர்.

கல்வித்துறை இணை இயக்குநர் சசிகலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு, அனைவருக்கும் கல்வி தி்ட்ட முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பாலா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் ஆசிரியர்களின் சான்றுகளை பார்வையிட்டனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணி மே 12 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →