விருதுநகர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 21 பேர் செவ்வாய்கிழமை படுகாயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டுச் பிற்பகல் 12.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ஓட்டுநர் முருகன்(39) ஓட்டினாராம். விருதுநகர் அடுத்த உசிலம்பட்டி அருகே திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில், முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த 20 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம்: மானாமதுரையைச் சேர்ந்த செல்வராஜ்(52), தஞ்சாவூர் சக்திவேல்(48), மதுரை முத்துக்கிருஷ்ணன்(52), ஓசூர் பாலாஜியின் மகள் திவ்யா(16), அவரது மனைவி காய்த்ரி(44), கன்னியாகுமரி ஜெபரீஷ்(73), சாத்தூர் பச்சைமலை மகன் முத்துராஜ்(30), கன்னியாகுமரி பாலசுந்தரின் மகன் ஆஸ்டின் பிரிட்டோ(9), மதுரையைச் சேர்ந்த வெங்கட் மனைவி ஜெயராணி(40), பாளையங்கோட்டை ஜேசு(67), நிலக்கோட்டை சுந்தரபாண்டியின் மனைவி மீனா(28), நாகர்கோவில் கோவிந்தனின் மகன் சுப்புராஜ்(44), கோவில்பட்டி மகாலிங்கம் மகன் சாமி(30), கல்லல் சங்கரம்மாள்(40), அதே பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் கிருஷ்ணன்(45), ருக்மணி(44), காளிராஜ்(38), ரெஜினா(36), சென்பகம்(40), ராஜம்மாள்(14) மற்றும் ஓட்டுநர் முருகன்(39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாண்டியன் நகர் போலீஸார் உடனே விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் காய்த்ரி, மகள் திவ்யா, கல்லல் பகுதியைச் சேர்ந்த சங்கரம்மாள், கிருஷ்ணன் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.