முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: வைகோ

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காத காரணத்தால் உலக அளவில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காத காரணத்தால் உலக அளவில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

கலிங்கபட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான மின்னொளி கைப்பந்துப்போட்டிகள் பாளையங்கோட்டையில் 3 தினங்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் பென்னடிக் முன்னிலையில் மதிமுக பொதுச்செயலரும், வையாபுரி நினைவு கைப்பந்தாட்டக் கழக தலைவருமான வைகோ விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:

விளையாட்டு வீரர்கள் முறையாக ஊக்குவிக்கப் படுவதில்லை. ஆகவேதான், விளையாட்டில் உலகளவில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரிகளில் முன்னுரிமை அளித்து இடம் அளிக்க வேண்டும். அரசு பணி வழங்க வேண்டும்.

தாலுகா, மாவட்ட அளவில் விளையாடும் வீரர்களை மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும். திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டின் மூலம் ஒற்றுமை, சமூக நல்லிண்ணக்கம் உருவாகும். சாதிய உணர்வுகள் மேலோங்காது. உடல் ஆரோக்கியம் கிடைக்கும். கிராம அளவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் உலக அளவில் விளையாட்டுத்துறையில் ஜொலிக்க முடியும் என்றார் அவர்.

நாக்அவுட் முறையில் நடைபெற்ற முதல் போட்டியில் சாயர்புரம் வெல்டன் கிளப் அணியும், படந்தப்புளி லிவா கிளப் அணியும் விளையாடின. இதில் சாயர்புரம் அணி வென்றது. இதையடுத்து சாத்தான்குளம் அணியும், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழக பி அணியும் விளையாடின. இதில் சாத்தான்குளம் அணி வென்றது.இதையடுத்து நடைபெற்ற லீக் போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளி, தருவைகுளம் புனித மிக்கேல் கிளப் அணி, திருநெல்வேலி சாரா அகதமி அணி, பெல் மார்க்கெட்டிங் கிளப் அணி ஆகிய அணிகள் விளையாடின.

நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் சத்யமூர்த்தி, குருசாமி, மாவட்ட மதிமுக செயலர் ப.ஆ. சரவணன், மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள், தூத்துக்குடி மாவட்டச் செயலர் எஸ். ஜோயல், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது,வைகோ மனைவி ரேணுகாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

வைகோ விளையாடுகிறார்: சனிக்கிழமை கலிங்கப்பட்டி கைப்பாந்தாட்டக் கழக அணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அணிகள் விளையாடுகின்றன. இதில்  கலிங்கப்பட்டி அணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விளையாடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →