முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர் மழையிலும் வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து குறைவு

தொடர் மழைக்கு வெலிங்டன் ஏரி நீர்மட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனால் விவசாயிகள் இந்த ஆண்டும் உரிய காலத்தில் நடவுப்பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Updated On : 12 மே, 2014 at 3:44 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:44 AM

தொடர் மழைக்கு வெலிங்டன் ஏரி நீர்மட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனால் விவசாயிகள் இந்த ஆண்டும் உரிய காலத்தில் நடவுப்பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

திட்டக்குடி அருகே உள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் ஏரி உள்ளது. வீராணம் ஏரிக்கு அடுத்து மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியான வெலிங்டன் நீர்தேக்கம் மூலம் சுற்றியுள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. 6,000 ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரியை மட்டுமே முழுமையாக நம்பி விவசாயம் செய்யப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக போதிய பருவ மழையில்லாததால், ஏரி நிரம்ப வில்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் பாதித்தனர். தற்போது வெலிங்டன் ஏரியின் நீர்பிடிப்பு 12.75 அடியாக உள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பரவலாக தொடர் மழை பெய்தது. தொடர் மழைக்கு வெலிங்டன் ஏரியின் நீர்மட்டம் கனிசமாக உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

Advertisement

ஆனால் வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய சேலம், கல்வராயன் மலை பகுதிகளிலிருந்து நீர்வரத்து இல்லாததால், விவசாயிகளின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்தது. இனி வரும் காலங்களில் போதிய அளவு பருவ மழை பெய்தால் தான் இப்பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இல்லையெனில் 6,000 ஏக்கரில் முற்றிலும் பயிர் செய்யமுடியாத சூழல் ஏற்படும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கோ.மாதவன் கூறியபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவ மழை சரியாக பெய்யாததால், வெலிங்கடன் ஏரி முழுமையாக நிரம்பவில்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால், இப்பகுதியில் இரண்டு ஆண்டுகளாக விவசாயம் முற்றிலும் பாதித்தது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் பருவ காலத்தில் போதிய மழை பெய்தால் தான், இப்பகுதியில் விவசாயம் செய்யமுடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.