மேலப்பாளையத்தில் அமிலம் வீச்சு: சிறுவன் உள்பட 6 பேர் காயம்
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் குடும்பத் தகராறில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை வீசியதில் சிறுவன் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் குடும்பத் தகராறில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை வீசியதில் சிறுவன் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
மேலப்பாளையம் ஹாமீன்புரத்தைச் சேர்ந்த இப்ராஹிம்ஷா மகன் சேக்மைதீன் (38). நதிகள், கால்வாய்களில் மணலை சலித்து பொருள்களை கண்டுபிடித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதார்பாத்து (35). இத் தம்பதிக்கு பக்கீராள்பானு (14), அசன்மைதீன் (13) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
தம்பதியிடையே செவ்வாய்க்கிழமை மாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தினர் வந்து தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது கழிப்பறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை மதார்பாத்து மீது சேக்மைதீன் வீசமுயன்றாராம். ஆனால், பிரச்னையை தீர்க்க வந்தவர்கள் மீது அமிலம் பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹாமீன்புரத்தைச் சேர்ந்த பானு (27), அபுபக்கர் மகன் மைதீன்பாத்து (42), செய்யதுஉசேன் மகன் இமாம்காசீம் (27), பசீர் மகள் ரப்பெனாசீர் (10), அவரது சகோதரர் கௌஸ்மைதீன் (9), ஜாகீர்உசேன் மகன் செய்யதுஅலி (32) ஆகியோர் காயமடைந்தனர். வீரியம் குறைந்த அமிலம் என்பதால் அனைவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து சேக்மைதீனை கைது செய்தனர். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் மாதவன், மேலப்பாளையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.