அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளால் திணறிய நெல்லை!
அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரது அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு நடவடிக்கைகளால் திருநெல்வேலி மாநகரம் செவ்வாய்க்கிழமை திணறிப்போனது.போலீஸார் அங்கும் இங்கும் அலைக்கழிந்து
அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரது அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு நடவடிக்கைகளால் திருநெல்வேலி மாநகரம் செவ்வாய்க்கிழமை திணறிப்போனது.போலீஸார் அங்கும் இங்கும் அலைக்கழிந்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க பரிதவித்து போயினர்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலர் மு.ஹரிஹர சிவசங்கர் பெயரில், கருவின் குற்றமே-காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே என்ற பெயரில் கருத்து சித்தரங்களுடன் கவிதை வடிவில் திமுக தலைவர் கருணாநிதியை சித்தரிக்கும் வகையில் மாநகரின் முக்கிய பகுதிகளான திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்கெட் திடல், சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைத்து செவ்வாய்க்கிழமை துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதற்காக அதிமுக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில், திமுக-வினர் எதிர்ப்பு வலுத்தது.
மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் ஒன்று கூடிய திமுக-வினர், மாநகரக் காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமாரை சந்தித்து,புகார் மனு அளித்தனர். மாநகரில் உள்ள அதிமுக-வினரது பேனர்களை அகற்றவேண்டும் என கோரினர். பின்னர், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றக் கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, முன்னாள் எம்எல்ஏ-வும், திமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அழகிரி ஆதரவாளரான மாலைராஜாவும் பாளையங்கோட்டை மார்கெட்திடலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேனரை அகற்றக் கோரி நடத்திய அவரது போராட்டத்துக்கு எதிராக அதிமுக-வினரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில், சித்த மருத்துவக்கல்லூரி அருகே அதிமுக-வினரும்,திமுக-வினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். கல்வீசியும் தாக்கினர். போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். இதேபோல, காங்கிரஸ் கட்சியினர் மத்திய முன்னாள் துணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், திருநெல்வேலி மாநகர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை கைப்பற்றினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர், அலுவலக பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே. வாசன், எம்பி ராமசுப்பு ஆகியோரது படங்களை அப்புறப்படுத்தி தீ வைத்த எரித்தனர். ஒரே நாளில் 3 பிரதான கட்சிகளின் தொண்டர்கள் நடத்திய அரசியல் போராட்டத்தால் மாநகரமே திணறிப் போனது.