முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் குட்டைகள் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு 

விருதுநகர் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் ஆதாரத்தை சேமித்து வைக்கும் வகையில்

Updated On : 11 நவம்பர், 2014 at 6:40 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:29 AM

விருதுநகர் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் ஆதாரத்தை சேமித்து வைக்கும் வகையில் 10 இடங்களில் பெரிய அளவிலான தண்ணீர் குட்டைகள் அமைக்கும் பணியை வனத்துறை மூலம் மேற்கொள்ள ரூ.20 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

   மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைக்கும் திட்டம், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுப்பதற்கு அகழி அமைக்கும் திட்டம், தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் திட்டம் ஆகியவை வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது, மலைப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருவதால் ஓடைகளிலும், மலையடிவாரப் பகுதிகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு மலைப்பகுதி அடிவார ஓடைகளில் ஓடும் வெள்ளநீரை தடுத்து தண்ணீர் குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் குட்டைகள் ஓடைப்பகுதியில் அகலமான இடமாகவும் சுற்றிலும் தடுப்பதற்கு போதுமான வசதியுள்ள இடங்களின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்பட இருக்கிறது.

Advertisement

    இதுபோன்றவைகளை கருத்திற்கு கொண்டு மழைக்காலங்களில் ஓடைகளில் அதிக நீரோட்டம் உள்ள பகுதிகளில் தண்ணீர் குட்டைகள் அமைக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சாத்தூர், தாணிப்பாறை, செண்பகத்தோப்பு, சாஸ்தாகோவில், அழகர்கோவில் அணை பகுதிகளுக்கு இடையே குறிப்பிட்ட 10 இடங்களில் தலா ரூ.2 லட்சத்தில் இக்குட்டைகள் அமைக்கப்பட இருக்கிறது.

    இது குறித்து வனத்துறை பாதுகாவலர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஒடைகளில் அகலமான சமவெளி பரப்புடன் கூடிய இடங்களில் தண்ணீர் குட்டைகள் அமைக்கப்படுகிறது. இக்குறிப்பிட்ட இடங்களில் 30 மீட்டர்  நீளத்திற்கு தடுப்புசுவரும், அதிகமான தண்ணீர் தேங்கி தடுப்புச்சுவர் வழியாக வெளியேறும் வகையில் கற்கள் மற்றும் மண் ஆகியவை மூலம் இருபுறமும் 10500 மீ்ட்டர் வரையில் கரைகள் பலப்படுத்தப்பட இருக்கிறது. இக்குட்டைகள் அமைப்பதால் குறிப்பிட்ட இடங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாறும்.

அதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் அனைத்திற்கும் ஈரப்பதம் ஏற்பட்டு பசுமையாக மாறும். இதனால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளும் தண்ணீர் மற்றும் இரைகளைத் தேடி காட்டுப் பகுதியில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் குறையும். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.