விருதுநகர் பகுதியில் 2 மாணவிகள் மாயம்
விருதுநகர் பகுதியில் 2 பள்ளிக்கூட மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் 2 பள்ளிக்கூட மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகரை அடுத்த பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(49). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் காவ்யா(16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாராம். இவர் திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், தோழியை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற காவ்யா நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதனால் கவலையடைந்த பெற்றோர் உறவினர், தோழி ஆகியோரின் வீடுகளில் விசாரித்தும் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இது குறி்த்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: விருதுநகரை அடுத்த இருக்கன்குடி அருகே முத்தார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதம்(48) என்பவரின் மகள் அழகுமீனாட்சி(15). இக்கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
Advertisement
ஆனால், இதுவரையில் வீடு திரும்பாத நிலையில் உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் ஆகியோரிடம் விசாரித்த நிலையில் எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். இது தொடர்பாக இருக்கன்குடி காவல் நிலையத்தில் மருதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.