விருதுநகர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும்,
விருதுநகர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், ஏடிஎம்களில் போதுமான பணமில்லாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பிரச்னையில் விரைவான ஒப்பந்தத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய வட்டார பகுதிகளில் எஸ்.பி.ஐ, ஐ.ஓ.பி உள்பட பல்வேறு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளின் 126 கிளைகள் உள்ளன. இதில் பணியாற்றும் வங்கி உயர் அலுவலர்கள் 70 பெண்கள் உள்பட 290 பேரும், பணியாளர்கள் 680 பேரும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை ஒட்டி, புதன்கிழமை காலை 10 மணிக்கு முன்பாகவே இம்மாவட்டத்திலுள்ள பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணமில்லாத நிலையேற்பட்டது. மேலும், கச்சேரி சாலையில் உள்ள வங்கிகளின் வட்டார, மண்டல அலுவலகங்களுக்கு அருகிலுள்ள ஏடிஎம் மையங்களில் மட்டும் காலை 11 மணி வரையில் பணம் இருந்தது. அதையடுத்து, வாடிக்கையாளர்கள் அனைவரும் பணமி்ல்லாத நிலையில் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டலச் செயலாளர் மாரிக்கனி, எஸ்.பி.ஐ வங்கியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தினால் வங்கிகளில் அன்றாடம் மேற்கொள்ளப்படும் காசோலை பரிமாற்றம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான கூலி, கருவூல காசோலைகள் மாற்றுதல் மற்றும் ஆசிரியர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிற்பதற்கான வரைவோலை எடுத்தல் உள்ளிட்ட ரூ.300 கோடிக்கு மேலான வங்கி பணப்பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.