சேலத்தில் 8-ம் வகுப்பு மாணவி கொடூர கொலை
சேலம் அழகாபுரத்தில் வியாழக்கிழமை இரவு எட்டாம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அழகாபுரம் வன்னியர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (40). இவர்களது மகள்கள் ஸ்ரீஹரிணி (22), தேஜாஸ்ரீ (13). பி.இ. பட்டதாரியான ஸ்ரீஹரிணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தேஜாஸ்ரீ அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிணிக்கு உடல் நலக்குறைவு என்பதால் அவரைப் பார்ப்பதற்காக கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். வியாழக்கிழமை துரைராஜ் வழக்கம் போல் பணிக்கும், தேஜாஸ்ரீ பள்ளிக்கும் சென்றிருந்தனர். பணி முடிந்து இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய துரைராஜ், வீட்டில் தனது மகள் தேஜாஸ்ரீ கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையில் துணை ஆணையர்கள் பாபு, பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். விசாரணையில் மாணவியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பதும், அவர் நீண்ட நேரம் போராடியதால் வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பதும் தெரிய வந்தது.
Advertisement
மேலும் வீட்டில் இருந்த ரூ.3 ஆயிரம், ஒரு செல்பேசி ஆகியவையும் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் தேஜாஸ்ரீக்கு நன்கு தெரிந்த இளைஞர்கள் இருவர் அவர் பள்ளியில் இருந்து திரும்பியதும் வீட்டுக்கு வந்திருப்பதும், அவர்களிடம் தேஜாஸ்ரீ உரையாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் யார், மாணவி தேஜாஸ்ரீயை எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவி கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.