விருதுநகர் மாவட்டத்தில் மீன் பண்ணை அமைக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் பண்ணை குட்டைகளில் மீன் வளர்த்தல் திட்டத்தில் பயனடைய விவசாயிகளிடம் இருந்து
விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் பண்ணை குட்டைகளில் மீன் வளர்த்தல் திட்டத்தில் பயனடைய விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் நீர்வள நிலவளத்திட்டம் மூலம் பண்ணை குட்டையில் மீன் வளர்த்தல் மற்றும் குறுகிய காலத்தில் வளரும் மீன் வளர்த்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக அர்ஜூனா உப வடிநீர் நிலம், சீவலப்பெரியாறு உபவடிநீர் நிலம் மற்றும் செங்கோட்டையாறு உபவடிநீர் நிலப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இத்திட்டத்தில் பயன்பெற போதுமான நீர் வசதி உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவை மின் இணைப்புடன் கூடிய பம்ப்செட் இருக்க வேண்டும். இதில், பண்ணை குட்டையில் மீன் வளர்த்தல் பணியை மேற்கொள்ள ரூ.9 ஆயிரமும், குறுகிய காலத்தில் மீன் வளர்த்தல் திட்டத்திற்கு ரூ.15 ஆயிரமும் உள்ளீட்டு செலவினமாக முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளின் விளைநிலங்களை மீன் வளத்துறை அதிகாரிகள் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
Advertisement
எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் மீன்வள உதவி இயக்குநர், விருதுநகர் அலுவலகத்தை நில ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை விலையி்ல்லாமல் பெற்று பயன் பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை பெற மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 286, இராஜமணி ஹால், பழைய அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர்-626001 மற்றும் தொலைபேசி எண்:04562-244704 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என விவசாயிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.