சென்னை அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் 4 பேர் சரண்
சென்னை, எம்.ஜி.ஆர் நகர், நெசப்பாக்கம், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) புல்லட் விஸ்வநாதன் (38). இவர், அப் பகுதியின் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார்.
சென்னை அதிமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் புதன்கிழமை 4 பேர் சரணடைந்தனர்.
சென்னை, எம்.ஜி.ஆர் நகர், நெசப்பாக்கம், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) புல்லட் விஸ்வநாதன் (38). இவர், அப் பகுதியின் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நெசப்பாக்கம், மாரியம்மன் கோயில் அருகே விஸ்வநாதன் நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மூவர், கண்ணிமைக்கும் நேரத்தில் விஸ்வநாதனை கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து, கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விஸ்வநாதனின் மைத்துனர் வரதனின் 2-வது மனைவி சசிகலா கூலிப்படை ஏவி விஸ்வநாதனைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
4 பேர் சரண்:
இவ் வழக்குத் தொடர்பாக, புதன்கிழமை (நவம்பர் 19) மாலை திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் எண்: 2-ல் நால்வர் சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சரணடைந்த சென்னை, வண்டலூர் தெய்வபிரகாசம் மகன் விக்கி (எ) விக்கனவேல் (23), திருநெல்வேலி மாவட்டம், பேட்டை, செந்தமிழ் நகர் ஆறுமுகம் மகன் முருகன் (25), சிதம்பரம், வடகிருபை மேலத் தெரு செல்வராஜ் மகன் தேவா (33), சிதம்பரம், அண்ணா நகர், காளியம்மன் கோயில் தெரு வேலு மகன் ராஜா(29) ஆகியோரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து புதன்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நால்வரும் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.