சிதம்பரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் 13 பேர் கைது! போலீஸார் இடையே தள்ளு முள்ளு!
சிதம்பரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் போது தள்ளு,
சிதம்பரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் போது தள்ளு, முள்ளு ஏற்பட்டு போலீஸார் பிடித்து இழுத்ததில் விவசாய சங்கத்தலைவர் ஒருவரின் சட்டை கிழிந்தது.
கர்நாடகத்தில் இருஅணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை 12 மணிக்கு ரயில் மறியலில் ஈடுபட காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தலைமையில் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி, பாசிமுத்தான்ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், ராதா மதகு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி, குமராட்சி சி.பழனிராஜா உள்ளிட்டோர் வந்தனர். அப்போது பாதுகாப்பிற்காக வந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்போவதாக தெரிவித்தனர்.
போலீஸார், விவசாயிகளுக்கு இடையே தள்ளு, முள்ளு: கைது செய்ய முற்பட்ட போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரனை போலீஸார் பிடித்து இழுத்த போது அவரது சட்டை கிழிந்நது. பின்னர் போலீஸார் விவசாயிகளை வலுக்கட்டயமாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரின் செயலால் விவசாயிகள் வேதனை: கர்நாடகத்தில் அணைகள் கட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்த வந்தோம். அரசியல் கட்சியினர் ரயில்மறியல் செய்யும் போது போலீஸார் வேடிக்கை பார்த்து, அவர்கள் மறியல் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வரை அனுமதி அளிக்கும் போலீஸார் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்து வலுக்கட்டயமாக கைது செய்தது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.