சிதம்பரத்தில் பாஜக பொதுச்செயலாளர் படுகொலை: துப்புக்கிடைக்காமல் போலீஸார் திணறல்
சிதம்பரத்தில் நகர பாஜக பொதுச் செயலாளர் ஜி.வெங்கடேசன் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது கொலையில் எவ்வித துப்பும் கிடைக்காததால், போலீஸார்
சிதம்பரத்தில் நகர பாஜக பொதுச் செயலாளர் ஜி.வெங்கடேசன் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது கொலையில் எவ்வித துப்பும் கிடைக்காததால், போலீஸார் கொலை குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சிதம்பரம் அணந்தீஸ்வரன்கோயில் அக்ரகாரம் மின்வாரியம் இறக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருபவர் ஜி.வெங்கடேசன் (52). நகர பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளராக இவர் வசிக்கும் வீட்டிவேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அருகாமையில் வீட்டில் உள்ள ரமேஷ் என்பவர் சனிக்கிழமை மதியம் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வெங்கடேசனுக்கு ராணி என்ற மனைவியும், விஜயக்குமார், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசன் கடந்த 2 வருடங்களாக மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், மனைவி மற்றும் மகன்கள் புதுச்சேரியில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜி.வெங்கடேசன் ஒலிபெருக்கி கடை வைத்து நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சிதம்பரம் நகராட்சி 17வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 தனிப்படைகள்: கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்ரண்டன்ட் வெங்கடாஜலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், பி.முருகானந்தம், மீனா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி, மகன்கள் மற்றும் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை: கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் கடந்த நவ.20-ம் தேதி புதுச்சேரியில் உள்ள தனது தங்கை கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்று அன்றிரவு ஊர் திரும்பியுள்ளார். பின்னர் 8 மணிக்கு புதுச்சேரியில் உள்ள தனது அக்கா மகள் உமாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பின்னர் 9 மணிக்கு மேல் செல்போன் செயலிழந்துள்ளது. இதனால் வெங்கடேசன் வியாழக்கிழமை இரவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். மேலும் நகர போலீஸார் வெங்கடேசன் மனைவி ராணி, மகன்கள் விஜயக்குமார், சரவணன், புதுச்சேரியில் உள்ள அவரது தங்கை கிருஷ்ணவேணி, அக்கா மகள் உமா உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால் போலீஸார் திணறி வருகின்றனர். வெங்கடேசனின் நண்பரான ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் போதும் கலியமூர்த்தி வீடு பூட்டியிருப்பதால், சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
உடல் தகனம்: பாஜக பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன் உடல் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவி மற்றும் மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லும் வழியில் உள்ள மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாஜக கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் தொலைபேசியில் விசாரணை: நகர பாஜக பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டது அறிந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராஜாகிருஷ்ணன் கடலூர் மாவட்ட பாஜக பொருளாளர் வே.ராஜரத்தினத்திடம் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசி நிலைமையகளை கேட்டறிந்தார்.
பாஜக கண்டனம்: சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி செயலாளர் ஜி.வெங்கடேசன் படுகொல கண்டனத்திற்குரியது என கடலூர் மாவட்ட பாஜக பொருளாளர் வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை, புலாணாய்வு உண்மைகளை வெளிக்கொண்டு என்ற நம்பிக்கை உள்ளது. வரும் முன் காப்போம் என்ற முறையில் காவல்துறை, உளவுத்துறையுடன் கைகோர்த்து இதுபோன்ற செயல்கள் தொடராக நிலையை ஏற்படுத்த வேண்டும் என அறிக்கையில் வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.