அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பழையூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஊராட்சியில் உள்ள பழையூர் மாரியம்மன் கோயில் தெருவில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள். இங்கு கழிவுநீர் வாய்க்கால், சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனி கழிப்பறை வளாகம் அமைத்து தரவும் மறுக்கின்றனர்.
இதுவரையில் சின்டெக்ஸ் தொட்டி மட்டுமே அமைத்துக் கொடுத்துள்ளனர். அதிலும், குடிக்க முடியாத அளவிற்கு உப்பு நீராகவே இருக்கிறது. இதனால் குடிநீர் வெளியிடங்களில் இருந்து ரூ.5 கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைமை உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி தலைவரிடம் தெரிவித்தால் செய்து கொடுக்க மறுத்து வருகிறார். அதனால் எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.