முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாடு

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெறவேண்டி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், கடலூர் ஶ்ரீமுஷ்ணம் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகள் செய்து தங்கத்தேர் புறப்பாடு செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெறவேண்டி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், கடலூர் ஶ்ரீமுஷ்ணம் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகள் செய்து தங்கத்தேர் புறப்பாடு செய்தனர்.

தமிழ்நாடு அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு தனி நீதிமன்ற உத்திரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுக்க பல்வேறு அறப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  வெள்ளிக்கிழமை பழனி மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு  திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி அண்ணாத்துரை சார்பில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டது.  தொடர்ந்து தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் எம்எல்ஏ., சண்முகவேலு, பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.   தவிர, கடலூர் மேற்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மாநில அம்மா விளையாட்டுக் கழக தலைவரும், கவுன்சிலருமான ஜம்புலிங்கம் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் மலைக்கோயிலுக்கு வந்து 10க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா வெற்றிபெற வேண்டி மொட்டைஅடித்துக் கொண்டனர். பின்னர் மூலவருக்கு ஜெயலலிதா பெயரில் பூஜைகள் நடத்தி தங்கத்தேர் இழுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.