ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக 9 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 பேரிடம் ரூ.27.25 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 பேரிடம் ரூ.27.25 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் அ.பழனிச்செல்வம் (49). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி பத்மாவதி என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் பத்மாவதி, பழனிச்செல்வத்திடம் படித்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். தனது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி (எ) வேல்முருகன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி அலுவலராக இருப்பதாயும், மற்றொரு சகோதரர் ராமர், சத்தியம் அறக்கட்டளை வைத்து நடத்துவதாயும் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய பழனிச்செல்வம், பாக்கியலட்சுமி, காளீஸ்வரி, சரண்யா, சரஸ்பாண்டி, ரமேஷ், பிரசாந்த், செல்வமணி, பாலசுப்பிரமணியன், சுப்புலட்சுமி ஆகியோரிடம் ரூ.27.25 லட்சத்தை 17.5.13 முதல் 7.2.14 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பணமாகவும், வங்கி மூலமாகவும் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் பத்மாவதி குறிப்பிட்டபடி அரசு வேலை வாங்கித் தரவில்லையாம். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் பத்மாவதி, இவரது சகோதரர்கள் ராமர், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி (எ) வேல்முருகன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இவர்களைத் தேடி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
இவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாய் 2008-ம் ஆண்டு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.