அதிகாரிகள் தொல்லையால் இறுதிக் கட்ட பட்டாசு உற்பத்தி பணி பாதிப்பு :ஆலை உரிமையாளர்கள் புகார்
விருதுநகர் வட்டாரப் பகுதி ஆலைகளுக்கு அடிக்கடி வரும் அதிகாரிகள் தொல்லையால் இறுதிக் கட்டமாக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு பட்டாசு
விருதுநகர் வட்டாரப் பகுதி ஆலைகளுக்கு அடிக்கடி வரும் அதிகாரிகள் தொல்லையால் இறுதிக் கட்டமாக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தீபாவளி திருநாளுக்கு 6 நாள்களே உள்ளன. ஏற்கனவே பட்டாசு விற்பனையாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளோம். தற்போது, பட்டாசுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இறுதிக் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் மீண்டும் ஆய்வு என்கிற பேரில் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வணிக வரித்துறை அதிகாரிகள் என குறிப்பிட்டு அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டியிருப்பதாக கூறி பணம் மட்டும் பட்டாசுகள் கேட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தொந்தரவினால் உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆலை மேற்பார்வையாளர், மேலாளர் ஆகியோரின் மேற்பார்வையில் இறுதிக் கட்ட உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே தீபாவளி திருநாள் வந்து விட்டதால் விற்பனையாளர்களுக்கு உற்பத்தி செய்து வழங்க முடியாத நிலையிருக்கிறது. எனவே பல்வேறு காரணங்களை கருத்திற்கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement