கர பெயர் ஏன்? விரைவில் வடசென்னை - 2: தனுஷ் பேச்சு
கர இசைவெளியிட்டு விழாவில் தனுஷ் பேசியது...
நடிகர் தனுஷ் கர இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படம் குறித்து பேசியுள்ளார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உண்மைச் சம்பவத்துடன் தொடர்புடைய கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமான கர வருகிற ஏப். 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் 54-வது படமென்பதால் அவரின் ரசிகர்களுக்கும் ஆவல் அதிகரித்துள்ளது.
படத்தின் டிரைலர் காட்சிகளும் நம்பிக்கையூட்டும்படி இருப்பதால் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றனர்.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19) சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், “நாம் வெல்ல கடவுள் ஆசிர்வாதம் தேவை. அது எனக்கு நிறைய இருக்கிறது. அதனால், நல்ல விஷயங்கள் என்னைத் தேடி வருகின்றன. இப்படத்திற்கு கர எனப் பெயரிட்டதால் நிறைய விமர்சனங்கள் வந்தன. இது சரியாக இருக்குமா? என இயக்குநர் கேட்டார். நான் கண்டிப்பாக படம் ஹிட் ஆகும் என்றேன். வேலையில்லா பட்டதாரி படத்தின் பெயருக்கும் இப்படியான விமர்சனங்கள் வந்தன. ஆனால், அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சிற்றம்பலத்துக்கும் இதுமாதிரி நடந்தது. இருந்தும், ஹிட் அடித்தது. கர படமும் அப்படி ஹிட் ஆகும். ஏன் இப்பெயரை வைத்தோம் எனப் படம் பார்த்தால் புரியும்.
கர என்கிற பெயரை விக்னேஷ் ராஜாவின் மனைவி ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல் 1001 முறை எழுதியிருக்கிறார். இப்படி எழுதினால் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கை. அந்த மனதிற்காகவே கர வெற்றியைப் பெறும். சஞ்சு சாம்சன் போல இயக்குநர் அமைதியாகக் கலக்குவார்.
என் ரசிகர்கள் பலரும் ஃபங்க் சிகை வைக்கச் சொன்னார்கள். இப்போது வைத்துவிட்டேன். நீங்கள் கேட்பதற்கு முன்பே சொல்கிறேன், வடசென்னை - 2 திரைப்படம் விரைவாக, சத்தமாக வரும். அன்புவின் எழுச்சி கூடிய விரைவில் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.