நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைகள், இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 95, பாபநாசம் கீழ் அணை 98, சேர்வலாறு அணை 60, மணிமுத்தாறு அணை 55.2, கடனாநதி அணை 18, ராமநதி அணை 51, கருப்பாநதி அணை 6, குண்டாறு அணை 13, அடவிநயினார் அணை 7, அம்பாசமுத்திரம் 42, சேரன்மகாதேவி 43, கன்னடியன் அணைக்கட்டு 47, களக்காடு 23.2, ஸ்ரீவைகுண்டம் 1, தென்காசி 17.4, செங்கோட்டை 11.4, ஆய்க்குடி 25.2, ஆலங்குளம் 56.5. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கணிசமான நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3,473.08 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 842 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 2,500 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 241.40 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 155.02 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 83 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 44 கனஅடியும், வடக்கு பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 26.03 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 55 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
100 அடியை நெருங்கிறது:
நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து மாலை நிலவரப்படி 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 4.20 அடி உயர்ந்து 75.65 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 59.65 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 59.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 60 அடியாகவும் இருந்தது.
இதேபோல் கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.60 அடி உயர்ந்து 45.28 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டி 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 112.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 10.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 12.00 அடியாகவும் இருந்தது.
அருவிகளில் வெள்ளம் நீடிப்பு:
நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து கணிசமாக இருந்ததால் திங்கள்கிழமை 4 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருந்தது. எனவே அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு இருந்தது.