நெல்லை மாவட்டத்தில் 106 வீடுகள் இடிந்து சேதம்: ரூ. 2.99 லட்சம் நிவாரணம் அளிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 106 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 106 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடை பருவத்தில் நெல், வாழைப்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைக்கு இருவர் உயிரிழந்தனர். இம்மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டத்தில் 5 வீடுகள் முழுமையாகவும், 18 வீடுகள் பகுதியாகவும், தென்காசி வட்டத்தில் 2 வீடுகள் முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியாகவும் இடிந்துள்ளன.
அம்பாசமுத்திரம் வட்டம் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் மழைக்கு இதுவரை 28 வீடுகள் முழுமையாகவும், 78 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழைக்கு இறந்த 4 கால்நடைகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரமும், உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கு தலா ரூ. 1.50 லட்சமும் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல் தெரிவித்தார்.