விருதுநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக 2 பேர் கைது: 77 சவரன் நகை,அரைகிலோ வெள்ளி பொருள்கள் மீட்பு
விருதுநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பல்வேறு இடங்களில் திருடியது தொடர்பாக 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம்
விருதுநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பல்வேறு இடங்களில் திருடியது தொடர்பாக 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து 77 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளயும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் பகுதியில் பாண்டியன் நகர், அல்லம்பட்டி, சூலக்கரை, பஜார், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இது தொடர்பாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிராக விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் கச்சேரி சாலையில் வியாழக்கிழமை இரவு தனிப்படையினர் வாகனத்தணிக்கையி்ல ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பேர் வந்தனர். அப்போது, போலீஸாரை பார்த்ததும் அவர்கள் திரும்பி செல்ல முயற்சித்தனர். பின்னர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.
Advertisement
அதன் பின் விசாரித்ததில் திருநெல்வேலி அருகே புளியங்குடியைச் சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் ஷாஜஹான்(24), மதுரை கம்மாக்கரை முத்துபேட்டையைச் சேர்ந்த முகமதுகனியின் மகன் ஷாகீர்உசேன்(28) என்ற விவரமும், குறிப்பிட்ட பகுதிகளில் ஆள்கள் இல்லாத நேரத்தில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே இருவரையும் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து 77 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் மோட்டார் வாகனம் உள்ளிட்டவைகளையும் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படையை சேர்ந்தவர்களை துணைக்காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.