சிதம்பரத்தில் தொடர் படுகொலைகள்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்
சிதம்பரம் நகரில் கடந்த ஓராண்டு தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. இப்படுகொலைகள் காவல் நிர்வாகத்தின் ஆளுமையற்ற போக்கை வெளிபடுத்துகிறது என கடலூர் மாவட்ட
சிதம்பரம் நகரில் கடந்த ஓராண்டு தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. இப்படுகொலைகள் காவல் நிர்வாகத்தின் ஆளுமையற்ற போக்கை வெளிபடுத்துகிறது என கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் ஹோட்டல் அக்சயாவில் கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுது. கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட பொருளாளர்கள் ஆ.அதியமான், செ.மன்னர்நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சு.திருமாறன், செ.ரத்தினவேல், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு. க.ஆதிமூலம், பாவாணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: சிதம்பரத்தில் செப்.2-ம்தேதி அதிகாலை படுகொலை செய்யப்பட்ட குமார், ராஜேஷ் படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காத வண்ணம் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறைபடுத்த வேண்டும்; காவல்துறை நிர்வாகத்திற்கு சவால்விடும் கூலிப்படையின் வேர்களை கண்டறியவும், ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில், சிதம்பரம் இரட்டை கொலை வழக்கை மத்திய புலணாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; கூலிக்கு கொலை செய்யும் கலாசார சீரழிவை தடுத்த தமிழக அரசு தனி காவல் அமைப்பு உருவாக்க வேண்டும்; கொலை செய்யப்பட்ட குமார், ராஜேஷ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தொடர் கொலைகளை தடுத்து நிறுத்தவம், கூலிப்படை கலாசார சீரழிவை தடுத்து நிறுத்தவும் அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியல் இயக்கங்களும் ஒரணியில் திரள வேண்டும்; வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும்.